அண்மையச்செய்திகள்

Tuesday 23 January 2018

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக நடத்தும் ஆர்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக நடத்தும் ஆர்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு
பேருந்து கட்டணத்தை 3600 கோடி வரை உயர்த்தி, நட்ட சுமையை மக்கள் மீது சுமத்தும் தமிழக அரசைக் கண்டித்து, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்கும்.
"""""""""""""”""""""""”""""”""""'""
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய, நடுத்தர மக்கள், தங்களது போக்குவரத்து தேவைகளுக்கு பேருந்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் தமிழக அரசு திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களை தாங்க முடியா சுமைக்கு ஆளாக்கி உள்ளது.
தமிழக அரசின் இந்த மக்கள் விரோத செயலைக் கண்டித்து, கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாடெங்கும் பலதரப்பினர் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழகம் முழுதும் மாணவர்களின் போராட்டமும் வலுவடைந்து வருகிறது.
இப்படி, முன்னேற்பாடுகள் ஏதுமில்லாமல் 3600 கோடி ரூபாய் அளவிற்குப் பேருந்து கட்டணத்தை இரவோடு இரவாக உயர்த்தி மக்களை வதைப்பதுதான் மக்களுக்கான அரசா என்ற கேள்விகளை மக்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.
திமுக ஆட்சியின் போது பேருந்து கட்டணமோ, மிசாரக் கட்டணமோ உயர்த்தப்படவே இல்லை, அம்மையார் உயிரோடு இருந்த போதும், அவருக்கு பின்னால் முதல்வரான ஓ.பி.எஸ், இ.பி.எஸ் களின் ஆட்சியில்தான் இத்தனை கொடுமைகள் அரங்கேற்றப் படுகின்றது என்றும், மக்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.
போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கி வருவதாகக்கூறி, இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசு, போக்குவரத்துத்துறை நட்டமில்லாமல் இயங்க உரிய நிர்வாக மேம்பாடுகளை மேற்கொள்ளாமல், கட்டணத்தை உயர்த்தி நட்ட சுமையை பொதுமக்கள் மீது சுமத்துவது ஏற்றுக்கொள்ள இயலாதது.
பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து எலிகளும், கரப்பான் பூச்சிகளும் குடியேறி, மழை நீரும் பேருந்துக்குள் கொட்டும் அளவிற்கு ஓட்டையும், உடைசலுமாக உரிய பராமரிப்பின்றி தகுதியற்றுப்போன பேருந்துகளை சரி செய்து, மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து கட்டண உயர்வை மட்டும் அறிவித்திருப்பது வெக்கக் கேடானது, விரோதமானது.
தமிழக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்வரும் 27.1.2018 சனிக்கிழமை அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு,
மக்கள் நலனில் அக்கறை கொண்ட மதிப்புக்குரிய செயல்தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்று ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்வதோடு,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பேரவைத் தோழர்கள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று பேரவைத் தோழர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பேரவைத் தோழர்கள் அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களை நேரில் அணுகி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் செய்தியை உடனடியாக உறுதி படுத்திட வேண்டும் என்று, மாவட்ட செயலாளர்களும், தலைமை நிர்வாகிகளும் அறிவுறுத்தப் படுகின்றனர்.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர்/தலைவர்
ஆதித்தமிழர் பேரவை
தலைமையகம். கோவை
23.1.2018

No comments:

Post a Comment