அண்மையச்செய்திகள்

Tuesday 13 June 2017

சூன்.14 'சே'பிறந்த நாள்!

சூன்.14 'சே'பிறந்த நாள்!
"""""""""""""""""""""""""""""""""""""
அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே' !
"கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!" தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய 'சே'வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை.
'சிரிக்கும் கண்கள்,
புகைக்கும் உதடுகள்,
சீவி முடியாத தலைமயிர், பயணித்து கொண்டேயிருக்கும் கால்கள், ஓயாத போராட்டங்கள்' இதுவே எர்னெஸ்டோ 'சே'குவேராவின் முத்திரைகள்.
உலக வரலாற்றில் 'சே'வின் போராட்ட பேச்சுகள் அழுத்தமானவை, அவையாவும் ஏகாதிபத்தியத்தை துரத்தி அடிக்கக்கூடியவை. இப்படியிருந்தது அவரின் பேச்சுகள் "ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும். அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, இதனின் கொடிய ஏகாதிபத்தியத்தை வேரறுப்பேன் "என சவாலிட்டார்.' அமெரிக்காவால் பாதிக்கப்படும் சிறிய நாடுகளுக்கு உதவுவது ரஷ்யாவின் கடமை' என ரஷ்யாவுக்கும் அறிவுரைத்தார்.
'சே'வின் கால்தடங்கள் லத்தீன் அமெரிக்க பகுதிகள், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள் என அநியாயங்களின் பிறப்பிடத்தில் எல்லாம் பதிந்தது. கியூபா விடுதலையை கண்டதே 'சே'வின் புரட்சியால் தான்.
"சாவை எண்ணி ஒருபோதும் நான் கவலை கொள்வதில்லை, என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை தூக்கிக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் !" என்ற 'சே'மரணத்தை கண்ட அஞ்சிடாத மனிதராகவே வாழ்ந்து வந்தார்.
இப்படியான 'சே'ஒரு மருத்துவர். ஆஸ்துமாவின் பாதிப்போடே அடர்ந்த காடுகளில் போராடியவர்.
'மனிதனுக்கு மனிதன் எவனும் இங்கு அடிமையில்லை' என்பதே 'சே'வின் கோட்பாடு. இவ்வுலகத்தை குலுக்கிய பெருந்தலைவர்களின் ஆயுட்காலம் மிகக்குறைவே, அவர்களது மரணமும் மர்மமானதே. ஆனால் அவர்களது சித்தாந்தத்திலேயே அநியாயங்களின் உலகம் தோற்கடிக்கப்படுகின்றது. இவ்வுலகத்தை குலுக்கும் எந்தவொரு தேசப்போராட்டமும் வர்கப்போராட்டமும் இவர்களை மறப்பதில்லை. மாவீரம் என்பது வீரத்தால் முடிசூடப்படுவதல்ல, எண்ணத்தால் - செயல்பாட்டால் - மனிதத்தால் முடிசூடப்படுவது.
இவ்வுலகத்தில் சீறி சினந்த தோட்டாக்கள் யாவுமே தன் சொந்த நாட்டு மக்களுக்காக பாய்ந்தது. 'சே'வின் தோட்டாக்கள் மட்டுமே இனங்கள் மறந்து மொழிகள் அற்று நாடுகளின் எல்லைகள் அறியாமல் அநியாயங்களிடையே சிக்கித்தவித்த மனிதனுக்காக பாய்ந்தது. மாவீரர்களை மரணம் புதைப்பதில்லை, விதைக்கிறது !
இன்றும் கியூபா பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் தினந்தோறும் சொல்வது என்ன தெரியுமா ? 'எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள், நாங்கள் 'சே'வை போல் இருப்போம்' என்பதுவே!
நீலவேந்தன்
ராணி
மகேசுவரன் ஆகிய
மூவரின் ஈக லட்சியத்தை
ஈடேற்ற 'சே' பிறந்த நாளில் சபதமேற்போம்!

நாகராசன்
பொதுச்செயலாளர் 

No comments:

Post a Comment