அண்மையச்செய்திகள்

Tuesday 5 January 2016

உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்! என போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டுகள் உள்ளுரில் வதைபடும் துப்புரவுத் தொழிலாளர்களின் இழிவைத் துட்சிக்க உள்ளுர் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தாதது ஏன்? ச.சு.ஆனந்தன் - துணை பொதுச்செயலாளர்

உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்! என போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டுகள் உள்ளுரில் வதைபடும் துப்புரவுத் தொழிலாளர்களின் இழிவைத் துட்சிக்க உள்ளுர் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தாதது ஏன்? -- ச.சு.ஆனந்தன் - துணை பொதுச்செயலாளர்

வர்க வேறுபாடுகளை பேசி வர்ணாசிரம கோட்பாடுகளுக்கு முட்டுக்கொடுக்கும் மார்சிஸ்ட்டுகளும் அதன் SC.பிரிவான தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், சாதிய சதியால் இழிவைச் சுமக்கும் துப்புரவு தொழிலாளர்களின் விடுதலைக்கு போராட மறுப்பது ஏன்? துப்புரவுத் தொழிலாளர்கள் தொழிலாளர்கள்! இல்லையா?

கையுறை, காலுறை, சோப்பு, சீப்பு வாங்கி கொடுத்துவிட்டு மாதா மாதம் சந்தா வாங்கிக் கொள்வதோடு தொலைந்து போகிறதா துப்புரவு தொழிலாளர்களின் அவலம்?

மார்ஸ்சிலிருந்து மாவோயிஸ்டுகள் வரை சே-விலிருந்து பகத்சிங் வரை உலக பாட்டாளிகளின் விடுதலைக்காக உயர்த்திய செங்கொடிகள்! காலமெல்லாம் "சோற்றில் கை வைக்கும் கையால்" மலத்தை அள்ளி தலையில் சுமக்கும் அவலத்தோடு, சாக்கடையில் மூழ்கும் சக்கிலியர்களை மீட்டெடுக்க உயராததன் மர்மம் என்ன? இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்களின் கண்களுக்கு இவர்கள்
பாட்டாளிகளாகவோ தொழிலாளர்களாவோ தென்படவில்லையா?

அடக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கொடிக்க தொழிலாளர் தினத்தன்று வெற்று முழக்கங்களோடு வீதியில் நின்று சூளுரைக்கும் சூரப்புலிகள் வீதி கூட்டும் தொழிலாளர்களின் துயர் துடைக்க ஒப்புக்கு கூட ஒரு போராட்டம் நடத்தாதது ஏன்?

சீரழிந்த சென்னையை சீர்படுத்த விலங்குகளை விட கேவலமாக இழுத்து செல்லப்பட்ட துப்புரவு தொழிலாளர்களை மீட்கவும் உரிமைகளை காக்கவும் ஆளும் அரசின் அடாவடித்தனத்திற்கு எதிராக கண்டனம் ஏதும் செய்யாமல்!

மக்கள் நலக்கூட்டியக்க தலைவர்களோடு சேர்ந்து கொண்டு, "நானும் ஜெயிலுக்குப் போறேன்! நானும் ஜெயிலுக்குப் போறேனு" நகைச்சுவை நடிகர் வடிவேலு சொல்லுவது போல், சாக்டையை அள்ளுவது போல் பாவலா காட்டும் வித்தையை யார்? கேட்டது!

கையால் மலம் அள்ளும் அவலம் குறித்து இந்து பத்திரிக்கை எழுதிகிற செய்திகளைக் கூட தீக்கதிர் எழுதாமல் தீண்டாமை பார்த்தது ஏன்?

மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசும் தத்துவஞானிகள் துப்புரவு பணியாளர்களின் விடுதலைக்கு போராடாமல் தற்குறிகள் ஆனது ஏன்?

சாணிப்பால் சவுக்கடிக்கு எதிராக போராடிய புரட்சிக்காரர்கள் நாங்கள்! என்று தம்பட்டம் அடிக்கும் காவிச்சிந்தனை படிந்த கம்யூனிஸ்ட்டுகள் இன்று சாக்கடை அள்ளுபவனின் விடுதலைக்கு போராடாமல் இருப்பது வியப்பொன்றுமில்லை என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னது போல் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் தன்னுடைய சாதி நலனே மேலோங்கி இருக்கும், என்பதற்கு கம்யூனிஸ்ட்கள் மட்டும் விதிவிலக்கா! என்ன?


No comments:

Post a Comment